சட்டத்தரணிக்கு எதிராக போலித் தகவலை பரப்பிய நபரின் கட்டுகாவல் நீடிப்பு

4 days ago


யாழ்ப்பாணம் சட்டத்தரணிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவர் எழுதிய காணி உறுதி தொடர்பில் தவறான தகவலை இணையம் ஒன்றில் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் மீது நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரது விளக்கமறியல் வரும் 18ஆம் திகதிவரை நீடித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த விடயத்தில் குற்றவியல் மற்றும் குடியியல் சட்டங்களின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்ய முறைப்பாட்டாளர் சட்டத்தரணி சிவலிங்கம் சார்பில் சட்டத்தரணிகள் தயாராகி வருகின்றனர்.



சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் பொய்யான உறுதிகளை நிறைவேற்றுவதாக அவரது ஒளிப்படத்துடன் இணையம் ஒன்றில் பதிவிடப்பட்டது. தன்மீதான அவதூறு தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.


முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இணைய பதிவை வெளியிட்ட நபரை பொலிஸ் நிலையத்து அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் அவரிடம் பதிவை வெளியிட்டமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.


சந்தேக நபர் நேற்றுமுன்தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்தார். 


இவ்வாறான போலி தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது தனிநபர்களுக்கு அவதூறை ஏற்படுத்தும் பதிவுகளை சமூக ஊடங்களில் பதிவிடுவது தொடர்வதால் உரிய விசாரணைகள் முடிவுறும் வரை சந்தேக நபருக்கு பிணை வழங்கக்கூடாது என சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் நலன்சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றிடம் சமர்ப்பணம் செய்தனர்.


அவரை இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதிவான் உத்தரவிட்டார்.


இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது. 


பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான், சந்தேக நபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


 போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட புதிய பல சட்டங்களை உள்ளடக்கி 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டத்தின் கீழ், பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான அதிகாரம் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.