மன்னார் சூடு படுகொலைகள் - இதுவரை ஐவர் நீதிமன்ற காவலில்; நால்வர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்

4 months ago

மன்னார் மாவட்ட நீதிமன்றுக்கு முன்பாக இடம்பெற்ற இருவர் சுட்டுக்கொலை மற்றும் அடம்பனில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்தாவது நபரும் கைது செய்யப்பட்டார்.

 அவர்களில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட இராணுவச் புலனாய்வு உத்தியோகத்தரும் தானாக முன்வந்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவரும் வரும் 29ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.20 மணியளவில் மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்புள்ள கோட்டை வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

2022ஆம் ஆண்டு உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த இருவர் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மன்னார் நீதிவான் நீதிமன்ற சுருக்கமுறையற்ற விசாரணைக்கு முன்னிலையாக நீதிமன்றுக்கு வருகை தந்த போதே அவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி்ச் சூடு நடத்திவிட்டு தப்பித்தனர்.

சம்பவத்தில் நொச்சிக்குளத்தை சேர்ந்த இருவர் உயிரழந்தனர். பெண் உள்பட இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் தொடர்பில் பேசாலையில் வைத்து ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இருவர்  கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு அடம்பனில் வைத்து ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர். 

இந்த நிலையில் இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பற்றி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்க இராணுவ புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்ந இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர் இன்று மன்னார் நீதிவான் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினார்.

சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் பேசாலையைச் சேர்ந்த மற்றொருவர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இரண்டு வழக்குகளும் வரும் 29ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் ஐவரும் அன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.